Sunday, January 26, 2014

ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம்

     உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் நிறைய இருப்பது இயற்கை. அதில் நீண்ட நாள் உயிர் வாழ வேண்டும் என்பதும் ஓர் ஆசையே.அதிலும் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று நினைக்காத மனிதனே இருக்க முடியாது. ஆரோக்கியம் இல்லாத ஒருவனுக்கு வாழ்க்கையில் இன்பமும், மகிழ்ச்சியும் இருப்பதில்லை.

       “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதும் “நொறுங்க தின்றால் நூறு வயது என்பதும் ஆன்றோர் வாக்கு. ஆரோக்கியத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.மனதிலும் உடலிலும் நோயற்ற நிலையே ஆரோக்கியம் என்கிறோம்.

        உயிரை சுமந்து திரிகின்ற இவ்வுடலில் வரக்கூடிய நோய்கள் பல, மனதுக்கு வரக்கூடிய நோய்கள் பல. இவ்விரண்டிலும் நோயிருக்கும் ஒரு மனிதன் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய இயலாது. ஆகவே மனித வாழ்க்கையில் ஆரோக்கியம் மிக மிக அவசியமான ஒன்றாகும்.

        அப்படிப்பட்ட ஆரோக்கியமான வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும்? நோய் வர காரணங்கள் என்ன? வராமல் எவ்வாறு தடுத்துக் கொள்வது? இன்ன இன்ன காரணங்களால் தான் நோய்கள் வருகின்றன என்று இயற்கை மருத்துவர்கள் ஆய்வு செய்து கூறியதோடு, வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகளை வாழும் நெறிகள் என வகுத்துத் தந்திருக்கிறார்கள்.

        அதன்படி வாழ்கையில் வாழும் நெறிகளைக் கடைப்பிடித்து, உடல் நலனில் அக்கறை செலுத்தி முறையாக வாழ்வோமானால் நோயின்றி நீண்ட நாள் வாழலாம்.

     அதிகாலையில் எழுந்திருப்பதால் சூரிய ஒளியால், நம் கண்களின் நுண்ணிய உறுப்புகள் பாதிக்கப்படாமல் காக்கப்படுகின்றன. பிறகு பல் துலக்கி மலஜலம் கழித்து விடவேண்டும். இல்லையேல் மலம் குடலில் தங்கி விஷ வாய்வை ஏற்படுத்தி உடலில் பல நோய்கள் ஏற்பட காரணமாகிவிடும்.

    சிறிது தூரம் நடத்தல் அல்லது யோகாசப்பயிற்சி காலை நேரத்தில் சுத்தமான காற்றை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். வாய் வழியாக காற்றை சுவாசிப்பது பல நோய்களுக்கு இடம் கொடுக்கும். தட்பவெப்ப நிலைக்கேற்ப குளிர்ந்த நீரிலோ, வெந்நீரிலோ குளித்து, சுத்தமான துவைத்த ஆடைகளை அணிய வேண்டும். அன்றாட உணவில் காரத்தைக் குறைத்து உயிர்சத்துள்ள உணவுகளை உண்ணுதல் வேண்டும்.தினசரி மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரை சேர்த்து வந்தால் வைட்டமின் ஏ அதிகம் கிடைப்பதுடன் மலச்சிக்கல் நோய் வராது.

       உயிர்ச்சத்துள்ள உணவுகளை உண்பது உடலுக்கு உயிர்ச்சத்து என்று சொல்லப்படும் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, காரச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உயிர் வாழ்வதற்கு தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் பழங்கள் மற்றும் வேகவைக்காத காய்கறிகளில் அதிகமாக உள்ளன. வாழைப்பழத்தில் கொழுப்புச்சத்து, மாச்சத்து, புரோட்டீனும், குறைந்த அளவு சுண்ணாம்புச் சத்து, செம்புச்ச்சத்து, கந்தகச்சத்து, ஏ.பி.சி.டி.இ. ஆகிய ஐந்து வகையான உயிர்ச்ச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளதால் கண் பார்வையை அதிகரிக்கச்செய்கிறது. தோல் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

    தினசரி காலையில் ஓர் எலும்மிச்சம் பழச்சாற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து குடிப்பது,மதிய உணவிலே மோரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகமாவதுடன், வயிறு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இரவில் இரண்டு வாழைப்பழமும்,இரண்டு பேரிச்சம் பழமும் சாப்பிட்டு ஒரு டம்ளர் இயற்கை சர்க்கரை கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வேறு எந்த டானிக்கும் தேவைப்படாது. உடலுக்கு சக்தியையும், அழகையும் தரும்.

   அவரவர் உழைப்புக்குத் தகுந்த உணவைச் சாப்பிட வேண்டும். அதிக கடினமான வேலை செய்பவர்களுக்கு அதிக உணவு தேவைப்படும்.அவர்களுக்கு எரிசக்தி அதிகம் செலவானதால் அதிக உணவு உண்ண வேண்டும்.

   உணவு உண்ணும்போது அவசர அவசரமாக உண்ணக்கூடாது. மன அமைதியுடன் உணவை விரும்பி உண்ண வேண்டும். உணவுக்கு இடையில் தண்ணீர் அருந்தக்கூடாது. பகலில் முக்கால் வயிறு உணவும், இரவில் அரைவயிறு உணவும் உண்பது ஆரோக்கியத்திற்கு இடமளிக்கும். உணவு உண்ட பிறகு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடல் சக்தியிழந்து போகும்.

    வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பதை வழக்கத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். நல்லெண்ணெய் தலைக்கும், உடலுக்கும் தேய்த்து முப்பது நிமிடம் கழித்து சீகைக்காய் அல்லது பாசிப்பருப்பு மாவு போட்டுக் குளித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். கண் குளிர்ச்சியாக இருக்கும். காலையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு இளம் வெயிலில் சிறிது நேரம் இருப்பதால் சூரிய வெளிச்சம் தோலின் மேல் பட்டு வைட்டமின் ‘டி சத்து நம்  தோலுக்கு  மினுமினுப்பையும் தோல் நோய் வராமலும் பாதுகாக்கிறது.எலும்பு வலுவாக தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது. 
  

  வாழ்க்கையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் தேவை. புகை,போதை, புலால் இவற்றைத் தவிர்ப்பது, போதிய ஓய்வு, இருக்கும் இடம், உடுத்தும் உடை இவற்றை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது, உண்ணும் உணவில் அறுசுவைகளை அளவோடு சேர்ப்பது, மனக்கவலைக்கு இடம் கொடுக்காமல் இருப்பது, இவை போன்ற பழக்கங்களைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே கற்றுத்தர வேண்டும்.

 நன்றி !

Thursday, December 12, 2013

இனிக்கும் விஷம் - ( SWEET POISON )

கையில் கனியிருக்க காய் உண்பார் உண்டோ ? உடலுக்கு நல்லது பயக்கும் உணவுகள் இருக்கும்போது நாம் தீது விளைவிக்கும் பொருள்களையே உண்டு நோயை தேடிக்கொள்கிறோம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருளான வெள்ளை சர்க்கரையின் கொடுமையான விளைவுகளை காண்போம். அதன் கொடுமைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும்.
வெள்ளை சர்க்கரையும், மனமும்
புள்ளிவிவரப்படி சிறு வயதினிலேயே குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களில் 75 % பேர் அதிக அளவில் சர்க்கரையை உண்டவர்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    
     வெள்ளை சர்க்கரையை உண்ணும் குழந்தைகள் மனதில் காழ்ப்புணர்ச்சியும்,கொடூர ரசனைகளும் வளரும் என்று ஆராய்ச்சியில் புலப்படுகின்றது.
இதயமும் வெள்ளை சர்க்கரையும்;
          “தையமின்  என்னும் Vit .B. குறைவு தான் அனைத்து இதய நோய்க்களுக்கும் காரணம் என்கிறது ஆராய்ச்சி. உணவில் Vit.B. குறைவில்லாமல் பார்ப்பது மிக அவசியம். ஆனால் உணவின் மூலம் உடலில் சேரும் Vit .B. சத்தினை மிக அதிக அளவில் திருடுவது யார் தெரியுமா? அந்த கயவன், திருடன் வெள்ளை சர்க்கரை தான். ஆம் சர்க்கரையை ஜீரணம் செய்ய  Vit.B. தேவைப்படுகிறது. ஆகையால், உணவு பாதையில் சேர்ந்து விடும் சர்க்கரையை ஜீரணம் செய்ய  தேவைப்படும்  Vit.B.யை உடல் Vit.B. யின் சேமிப்பு கிடங்குகளான (storage for Vit. B.) கல்லீரல், சிறுநீரகம், இருதயம்,
போன்ற உறுப்புகளிலிருந்து திருடப்பட்டு, சுரண்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதனால் தினமும் சர்க்கரை உண்டுவந்தால் Vit.B. பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம்.இந்த பற்றாக்குறை நிச்சயமாக இருதய கோளாறுகளை கொணரும். நாம் வெள்ளை சர்க்கரை உண்பது தற்கொலைக்கு ஒப்பாகும்.
வெள்ளை சர்க்கரை =====> Vit.B பற்றாக்குறை =====> இருதய கோளாறு .
அன்பர்களே! இதற்கான மாற்று என்ன? நாம் வெள்ளை சர்க்கரையின் இனிப்பை தவிர்க்க வழியுண்டா ? உண்டு.
நமக்கு இனிப்பு தான் தேவை.அதனை தேன், கருப்பட்டி வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இதோ பிரம்மிக்க வைக்கும் ஓர் ஒப்பீடு

             Vit.B. வகைகள்
நாட்டு சர்க்கரை           (100 g)
வெள்ளை சர்க்கரை   (100 g)
 தையமின்        (Thiamin)
 ரிபோப்லையவின் (Riboflavin)
 நியாசின்          (Niacin)
 பைரிடோக்சின்    (Pyridoxine)
 பண்டோதேனிக் அமிலம் (Pantothenic Acid)
 பையோடின்       (Biotin)
         தாதுக்கள்
 கால்சியம்        (Calcium)
 பாஸ்பரஸ்       (Phosphorus)
 இரும்பு          (Iron)
 செம்பு           (Copper)
 மெக்னீசியம்     (Magnesium)
 குளோரின்       (chlorine)
 சோடியம்        (Sodium)
 பொட்டாசியம்    (Potassium)
 245M Mcg.
240 Mcg
 4 Mg.
270 Mcg.
260 Mcg.
16 Mcg


258 Mg
30 Mg
7.97 Mg.
1.93 Mg
.04 Mg.
317 Mg
90 Mg
1500 Mg..
0
0
0
0
0
0


1 Mg
0 Mg
.04 Mg
.02 Mg
0
0
3 Mg
5 Mg

மேலும் ஆர்த்ரைடீஸ்,ருமாடிசம். பல் சொத்தையாதல்,எலும்புகள் பலவீனப்படுதல் போன்ற கொடிய நோய்களுக்கும் சர்க்கரையே வழிவகுக்கிறது.
 நம் குடும்பத்தில் நம் குழந்தைகளுக்கு சர்க்கரையினை தினசரி கொடுத்துவிட்டு ஆரோக்கியத்தை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? 258 mg.  கால்சியம் சத்துள்ள வெல்லத்தை ஒதுக்கிவிட்டு வெறும் 1 Mg  கால்சியம் சத்துள்ள சர்க்கரையில் பானங்களை தயாரித்து கொடுத்துவிட்டு பிள்ளைகளுக்கு கால்சியம் மாத்திரைகளை தினமும் விழுங்க கொடுக்கும் அவல நிலை மாற வேண்டாமா?
    ஆகையால் இனிப்பு தேவை என்றால்  வெள்ளை சர்க்கரை வேண்டாம். இனியாகிலும் நல்ல உணவுகளான  தேன், கருப்பட்டி வெல்லம், நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு போன்ற இனிய இனிப்புகளை,ஆரோக்கியமான இனிப்புகளை பயன்படுத்துவோமாக.

நீர் சிகிச்சை

தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் பலன்களை போலவே இயற்கை மருத்துவத்தில் நீர் சிகிச்சை என்ற சிகிச்சை உள்ளது.ஐம்பூதங்களில் ஒன்றான நீரைக் கொண்டு பல விதமான நோய்களுக்கும் எடுத்துக்காட்டாக உடல் பருமன், தோல் நோய்கள் ,கருப்பை கோளாறுகள் மற்றும் மேற்சொன்ன அனைத்து நோய்களுக்கும் நீராவி குளியல்,இடுப்பு குளியல்,முதுகு தண்டு குளியல்,ஈரப்பட்டி போன்ற சிகிச்சை முறைகளின் மூலம் கண்டிப்பாக எவ்வித மருந்து மாத்திரைகளும் இல்லாமல் குணப்படுத்த முடியும்.

ஆரோக்கியமான உடல் நிலையே ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம். வாழ்க வளமுடன் .

Wednesday, November 20, 2013

இயற்கை மருத்துவம் ஒரு பார்வை

இயற்கை மருத்துவத்தின் முதல் மருந்து தண்ணீர்


மனிதனின் உடலில் 70 சதவிகிதம் நீர் தான் உள்ளது. இயற்கை மருத்துவர்களின் முதல் அறிவுரை ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தான் .என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தும், என் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் அனுபவத்தில் இருந்தும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பல பல நன்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

சாப்ட்வேர் மற்றும் உடல் உழைப்பு குறைவாக உள்ள அனைத்து துறைகளில் பணிபுரியும் பல நண்பர்கள் உள்ளாகும் முதல் மற்றும் மூல பிரச்சினை உடல் பருமன். உடல் உழைப்பு குறைவால் உடலில் கொழுப்பின் தேக்கம் அதிகமாகிறது.தண்ணீர் அதிகம் குடிப்பதனால் திசுக்களில் கொழுப்பு படிவதை தடுத்து உடம்பிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது .அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் பசியின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது மேலும் உடம்பின் அமிலத்தன்மையை நிலைபடுத்தி வைக்கிறது. அதனால் நண்பர்களே நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

உடம்பில் நீர் சத்து சமநிலையில் வைப்பதன் மூலம் தோல் பகுதியில் இருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன, தோல் வறட்சியின்றி மிருதுவாக புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதனால் தோல் நோய்களான எக்சிமா (eczema), psorpசொரியாசிஸ்(psoriasis) , தோல்சுருக்கம்(wrincles), கரும்புள்ளிகள்(spots) போன்றவையும் குணமாகும்.

மேலும் மூளையின் வேலை செய்யும் திறன் அதிகரிக்கிறது, நுரையீரல் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கிறது, நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 50% மாரடைப்பில் இருந்து பாதுகாக்கிறது ,நீர் சத்து குறைவினால் உண்டாகும் முதுகுவலி, தலைவலி குணமாகும். செரிமான சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு அளிக்கும். சிறுநீரக கற்கள் முதல் புற்று நோய் வரை அனைத்து வித நோய்களுக்கும் ஒரு அரு மருந்து “தண்ணீர் பருகுவது

Sunday, November 17, 2013

யோகாசனம் . ஓர் அறிமுகம்.

'Yuj' என்ற வார்த்தை தான் மருவி யோகா என்றானது.  யோகம்  என்பதற்கு இணைப்பு அல்லது சேர்ப்பு என்று அர்த்தமாகும். 'ஆசனம்' என்பதற்கு 'இருக்கை' என்று பொருளாகும். ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில் நிலையாக, சில நிமிடம் இருத்தல் 'யோகாசனம்' எனப்படும். 

நாம் வாழும் வாழ்க்கையில் உணவு, உடை, உறக்கத்திற்கு தரும் அதே முதலிடத்தை ஆரோக்கியமான, நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும். உடற்பயிற்சியானது உடலை அழகுபடுத்தி, உற்சாகம் தருவது மட்டுமன்றி, மனதிற்கு தேவையான உற்சாகத்தையும், அமைதியும் தருகிறதா என்று கவனித்தல் வேண்டும். அப்படி மனதையும் உடலையும் ஒருங்கே பண்படுத்தும் கலையே யோகக்கலை ஆகும்.

யோகா என்பது ஓர் அறிவியல் பூர்வமான உடற்பயிற்சி கலையாகும். இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் முன்னோர்களும், முனிகளும், ரிஷிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது மேலை நாடுகளில் நாமே வியக்கும் வண்ணம் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

கீதையில் யோகத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் செலுத்தினால் மனம் தெளிந்து அமைதி கிடைக்கும் என்றும், அலை பாய்ந்து தவிக்கும் நமது உள்மன கேள்விகளுக்கு நம்மிடமிருந்தே பதில் கிடக்கும் என்று கூறுகிறது.

நம் மனநிலையானது மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகிறது. 

1. மூதா (Moodha)

2. சிப்த்தா (Kshipta)

3. நிக்சிப்த்தா (Nikshipta)

இதில் "மூதா" என்னும் மன நிலையின் முக்கிய வேர்கள் பற்று, பேராசை, கோபம், மாயை போன்றவையாகும். இதன் முக்கிய குணங்களான தூக்கம், பயம், சோம்பல், பிறருக்கு உதவாமை போன்றன இம்மனநிலையில் உள்ள மனிதருக்கு காணப்படும்.

'சிப்த்தா' மனநிலையில் உள்ளவன் அறியாமையில் இருப்பான். அவன் சரி எது? தவறேது? பாவம், புண்ணியம், பற்று, பற்றின்மை, அறிவு, அறிவீனம் என்று பிரித்தறியா நிலையில் இரண்டும் கெட்டானாக இருப்பான்.

'நிக்சிப்த்தா'  நிலை என்பது கரும யோகத்தின் மூலம் நல்லவைகளை அடைதல். இந்நிலையில் உள்ள மனிதன் மகிழ்ச்சி, மன்னிக்கும் தன்மை, தெய்வ பக்தி, பொறுமை, கருணை, சகிப்புத்தன்மை மற்றும் தன்னம்பிக்கை உள்ளவனாக காணப்படுவான். இந்நிலையில் உள்ளவன் நல்ல அறிவை பெற்றிருப்பான். பற்று என்பது மாயை என்பதை புரிந்திருப்பான். 

யோகா பயிற்சிகள் ஒரு மனிதனை "மூதா", "சிப்த்தா" போன்ற கீழான நிலையிலிருந்து உயர்ந்த நிலையான "நிக்சிப்த்தா" நிலைக்கு கொண்டு செல்லும்.

இப்பயிற்சிகள் பல வகைகளாகவும், நிலைகளாகவும் உள்ளன. இதில் ஒரு சில வகை ஆசனங்களை தினமும் பயிற்சி செய்து வந்தாலே போதும், நம் உடல் ஆரோக்கியமாகவும், மனம் அமைதியாகவும் இருக்கும். நல்ல தூக்கம் வரும். 

இளமையை மெருகேற்றவும், முதுமையை தள்ளி போடவும் உதவும் யோகாசனங்களை  இத்தொடரில் எளிமையாக விளக்கவுள்ளோம்.